பதிவு செய்த நாள்
29
ஜூலை
2024
10:07
திருத்தணி; திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகமாக நடந்தது. இதை முன்னிட்டு, தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், ரயில் மற்றும் வாகனங்களில், திருத்தணிக்கு காவடி எடுத்து வந்து, முருக பெருமானை தரிசனம் செய்தனர்.
மேல் திருத்தணி நல்லாங்குளம், மலையடிவாரத்தில் உள்ள, சரவணப்பொய்கை திருக்குளத்தில், பக்தர்கள், காவடியுடன் புனித நீராடினர். பின், படிகளில் காவடிகளை வைத்து பூஜை செய்து, பக்தி பாடல்கள் பாடியபடி, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்திற்கு எடுத்துச் சென்று, நேர்த்திக் கடனை செலுத்தினர். சில பக்தர்கள், மொட்டை அடித்தும், அலகு குத்தியும், மலைக் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசனம் செய்தனர். ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, மூலவர் முருகப் பெருமானுக்கு, மரகதக் கல், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் நகை அலங்காரம், புஷ்ப அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. இதே போல், காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில், ஆறு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர்.