பதிவு செய்த நாள்
29
ஜூலை
2024
03:07
கோவை: கோவை சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆடிக்கிருத்திகையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானுக்கு உகந்த விசேஷமான நாட்களில் ஆடிக்கிருத்திகையும் ஒன்று. இந்நாளையொட்டி, காந்திபார்க் சுக்கிரவார்பேட்டையிலுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை சுவாமிக்கு, சகல திரவிய அபிஷே கம் நடந்தது. மலர் மாலைகள், அணிகலன்கள் வஜ்ரவேல், தங்கக்கிரீடம் ஆகியவை அணிவிக்கப்பட்டு சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முன்னதாக, கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, சுவாமி தரிசனம் செய்தனர். ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்திலுள்ள, ஆறுமுக சுப்ரமணிய சுவாமி சன்னதியில் முருகப்பெருமான், சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காந்திபார்க் பொன்னையராஜபுரத்திலுள்ள பாலமுருகன், சாய்பாபா காலனியிலுள்ள முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதே போல், ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.