பதிவு செய்த நாள்
30
ஜூலை
2024
11:07
மானாமதுரை; மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் வள்ளி, தெய்வானையுடனான முருகன் கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு நல்ல மழை பெய்ய வேண்டியும்,உலக நன்மைக்காகவும் 751 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மானாமதுரை அருகே வெள்ளி குறிச்சி கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனான முருகன் கோயிலிலிருந்து கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பாதயாத்திரை திருப்பணி குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் தைப்பூசம்,வைகாசி விசாகம் போன்ற விழாவிற்கு பாதயாத்திரையாக பழனி,திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். நேற்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடைபெற்ற 751 குத்துவிளக்கு பூஜையை பாதயாத்திரை திருப்பணி குழு தலைவர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இதில் வெள்ளிக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட மகளிர்களுக்கு குத்துவிளக்கு,சேலை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.அன்னதானம் நடைபெற்றது.வெள்ளிக்குறிச்சி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.