பதிவு செய்த நாள்
30
ஜூலை
2024
12:07
சிதம்பரம்; சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் வேண்டுதலின்பேரில், தி மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பிரசித்திப்பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. தீமிதி விழா நேற்று நடந்தது. அதையொட்டி, காலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தும், மாவிளக்கு போட்டும் வழிபட்டனர். வேண்டுதலின்பேரில் பால் காவடி எடுத்தும், செடல் குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலை சக்தி கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு, கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் பிரேமா வீராசாமி, பரம்பரை அறக்காவலர் கலியமூர்த்தி ஆகியோர் செய்தனர். விழாவில் தில்லை சீனு, தில்லை மக்கின், குமார் ஆகியோர் தீமிதி திருவிழாவை தொகுத்து வழங்கியதுடன், பக்தர்களுக்கு உதவியாக ஒலிபெருக்கியில் பேசி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.