பதிவு செய்த நாள்
30
ஜூலை
2024
12:07
திருச்செந்தூர்; சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று 108 மகாதேவர் சன்னதி முன், சுவாமி ஜெயந்திநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு என்கிறோம். இக்கோவிலில் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பிரதான முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை நேற்று கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (30ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. சுவாமி ஜெயந்திநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காவடி, பால்குடத்துடன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.