பதிவு செய்த நாள்
30
ஜூலை
2024
12:07
புவனேஸ்வர்; புரி ஜெகன்னாதர் கோவிலின் பொக்கிஷ அறையில் ரகசியப் பாதை உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பாக தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவின் புரியில் அமைந்துள்ளது ஜெகன்னாதர் கோவில். இந்தக் கோவிலின் பாதாள அறையில் அமைந்துள்ள பொக்கிஷ அறையில் விலையுயர்ந்த பொருட்கள் உள்ளன. அவற்றை கணக்கிடவும், புனரமைக்கவும் பொக்கிஷ அறையை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பொக்கிஷ அறையில் வெளிப்புற மற்றும் உட்புற அறைகள் சமீபத்தில் திறக்கப்பட்டன. அங்கிருந்த விலைஉயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை, மரப்பெட்டிகளில் வைத்து, தற்காலிக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. பொக்கிஷ அறைகளைப் புனரமைக்கும் பணிகள் துவங்க உள்ளன. அதன்பின், இந்த பொருட்கள் மீண்டும் அங்கு வைக்கப்படும். இந்தப் பணிகளை மேற்பார்வையிட, ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ரத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொக்கிஷ அறையில் ரகசிய சுரங்கப் பாதை உள்ளதாக செய்திகள் வெளியாயின. வரலாற்று ஆதாரங்களையும் சிலர் வெளியிட்டனர்.
இது தொடர்பாக முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ரத் தலைமையில் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதைத் தொடர்ந்து அவர் கூறிஉள்ளதாவது: பொக்கிஷ அறையில் ரகசிய சுரங்கப்பாதை உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொக்கிஷ அறைக்கு பாதிப்பு இல்லாத வகையில், எந்தச் சேதமும் ஏற்படாத வகையில், அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். ரகசிய பாதாள அறை இருப்பது குறித்து தெரியவந்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இல்லாதபட்சத்தில், பொக்கிஷ அறைகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த அறைகளில் உள்ள பயன்படுத்தப்படாத, அலமாரிகள் உள்ளிட்டவற்றை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.