பதிவு செய்த நாள்
30
ஜூலை
2024
12:07
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் 4000 ஆண்டு பழமையான குத்துக்கல்லை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலம், புரசடைஉடைப்பு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன், ஆர்வலர் இலந்தக்கரை ரமேஷ் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது: இப்பகுதியில் நெடுங்கல் என்ற குத்துக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இது பெருங்கற்கால ஈமச்சின்னமாக கருதப்படுகிறது. இறந்தவர் நினைவாக இக்கல் நடப்பட்டிருக்கும். இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் குத்துக்கல்லை தெய்வமாக வழிபட்டுள்ளனர். இக்கல்லின் தோற்றம் 2800 முதல் 4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது. குத்துக்கல்லின் மேற்பகுதி கூர்மையாக இருக்கும். சில இடங்களில் வட்டபகுதியாக இருக்கும். தமிழகத்தில் மலை, குன்றுகளில் இவை காணப்படும். இதை சங்க இலக்கியத்தில் நாட்டுக்கல் என்று சொல்வார்கள். மக்களை வழிநடத்தி வந்த தலைவர் வயது மூப்பின் காரணமாகவோ அல்லது போரில் வீரத்துடன் செயல்பட்டு, இறந்திருந்தால், அவர்களது நினைவாக நெடுங்கல் அமைக்கப்படும். கல்லில் மேல் பகுதி 6 அடி உயரமும், 3 அடி அகலமும், மண் பகுதிக்குள் 5 அடி ஆழம் இருக்க கூடும். இதன் முகப்பு கிழக்கு திசையில் சூரிய உதயத்தை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளன. இதன் அருகே தாமரை வடிவில் கல் வட்டம் காணப்படுகின்றன. தற்போது இவை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டில் ஈரோடு, சிவகங்கை மாவட்டத்தில் காணப்படுவது வரலாற்று சிறப்பு அம்சமாகும் என்றனர்.