திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம் நடந்தது.திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா நேற்று காலை 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரம் முன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. அலங்காரத்தில் எழுந்தருளிய சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு தீபராதனைகள் நடந்தது. 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக ஆக.6ல் தேரோட்டம், 8ல் அம்பாள் தபசு, மறுநாள் திருக்கல்யாணம், ஆக.11ல் சுந்தரர் கைலாய காட்சி, மறுநாள் உற்ஸவ சாந்தி நடைபெறும். விழா நாட்களில் கேடயம், பல்லக்கு, காமதேனு, அன்னம், கிளி, வெள்ளி ரிஷபம் போன்ற பல வாகனங்களில் சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.