பதிவு செய்த நாள்
08
ஆக
2024
10:08
செங்கல்பட்டு; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு, 53வது ஆடிப்பூர பெருவிழா, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கலசவிளக்கு வேள்வி பூஜையுடன், கடந்த 5ம் தேதி துவங்கியது. இதைத்தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், நேற்று முன்தினம் சுயம்பு அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் நடந்தது. சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், நேற்று முன்தினம் துவங்கியது. அதன்பின், ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜை, நேற்று நடந்தது. அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, செவ்வாடை பக்தர்கள் வழிபட்டனர். அதன்பின், ஆதிபராசக்தி அம்மன், சுயம்பு அம்மனுக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் பாலாபிஷேகம் செய்து, நிறைவு செய்தார். இவ்விழாவில், தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோயம்புத்துார், திருப்பூர் மாவட்டங்களின் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி சதாசிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.