பதிவு செய்த நாள்
08
ஆக
2024
10:08
திருவொற்றியூர்; ஆடிப்பூரத்தை ஒட்டி, அம்மன் கோவில்களில் வளைகாப்பு உற்சவம் கோலாகலமாக நடந்தது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம், பூர நட்சத்திரத்தில், வடிவுடையம்மன் உற்சவ தாயாருக்கு, வளைகாப்பு வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, நேற்று காலை, வடிவுடையம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், சன்னிதி முழுதும் கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலையில், கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில், உற்சவ தாயார் ஊஞ்சலில் எழுந்தருளினார். பின், கணபதி பூஜையுடன், வளைகாப்பு வைபவம் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு, நவதானியங்கள் அடங்கிய மூட்டையை வயிற்றில் கட்டி விட்டனர். மங்கள வாத்தியங்கள் முழங்க, கையில் கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்பட்டு, வளைகாப்பு வைபவம் நடந்தேறியது. பின், பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
எழுந்தருளிய நாச்சியார்; திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தையொட்டி, காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரமாண்ட மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலையில், பவள வண்ண பெருமாளுடன் ஆண்டாள் தாயார் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளி, உள் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின், மைய மண்டபத்தில், ஊஞ்சல் சேவை நடந்தது. அதேபோல, மணலி, திருவுடை நாதர் – திருவுடை நாயகி கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி, அம்மன் சன்னிதி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலையில், உற்வச தாயார் கண்ணாடி வளையல்களாலான அலங்காரத்தில் எழுந்தருளி, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, திருவிளக்கு பூஜையும் நடந்தது. மேலும், திருவொற்றியூர், தேரடி, அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில், மூலவர் சன்னிதி, கண்ணாடி வளையல்களாலான தோரணத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில், உற்சவ தாயார் பிரமாண்ட கண்ணாடி வளையல்கள் அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. மேலும், திருவொற்றியூர், ஜீவன்லால் நகர், பொன்னியம்மன் கோவிலில், உற்சவ தாயாருக்கு, ஆடிப்பூர வளைகாப்பு வைபவம், வெகு விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வுகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பால திரிபுர சுந்தரி; திருவொற்றியூர், தேரடி, ஈசாணிமூர்த்தி கோவிலில், பிரசித்தி பெற்ற முத்தப்பர் – கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினசரி, ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்து செல்வர். இக்கோவில் வளாகத்தில், குழந்தை பருவத்தில் எழுந்தருளியிருக்கும் பால திரிபுர சுந்தரிக்கு, ஆடிப் பூரத்தையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று பால திரிபுரசுந்தரிக்கு, தங்க நிற கொண்டை, வாழைப்பழத்தாலான ஜடை, வண்ண கண்ணாடி வளையல்கள் கொண்டு செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு, ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ஆண்டாள் கோலத்தில் எழுந்தருளிய, பால திரிபுர சுந்தரி தாயாரை தரிசித்தால், குழந்தை வரம், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.