பதிவு செய்த நாள்
08
ஆக
2024
10:08
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், நேற்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு மலைக்கோவில் காவடி மண்டபத்தில், உற்சவர் பெருமானுக்கு 1,008 குடம் பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடிப்பூரத்தை ஒட்டி, சென்னை வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று முன்தினம் இரவே திருத்தணிக்கு வந்து தேவஸ்தான குடில்கள், தனியார் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கினர். நேற்று காலை 8:00 மணி முதல், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உடல் முழுதும் அலகு குத்தியும், மலர் மற்றும் மயில் காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன், ஆண்-, பெண் மற்றும் குழந்தைகள் மொட்டை அடித்து சரவணபொய்கையில் நீராடினர். பின், மலைப்படிகள் வழியாக சென்று மூலவரை தரிசித்தனர். மேலும், சில பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றும் வழிபட்டனர். நேற்று, 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.