திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர முளைகட்டுத் திருவிழா கோலாகலமாக நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29ம் தேதி காலை துவங்கியது. 4ம் திருநாளான 1ம் தேதி காலை காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம், இரவு அம்பாள் வீதிஉலா நடந்தது.
9ம் நாளான நேற்று முன்தினம் காலை செப்புத் தேரில் அம்பாள் பவனி நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று காலை அம்பாள், அஸ்திரதேவிக்கு பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து மாலைஅம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடந்த ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுக்கு 1 லட்சத்து 8 வளையல்கள் சாத்தப்பட்டு, மடியில் முளைகட்டிய தானியங்கள், பட்சணங்களை நிரப்பி சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதனையடுத்து அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி சன்னதி உற்சவமண்டபத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முளைகட்டிய தானியங்கள், பட்சணங்கள், வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் நெல்லை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.