பதிவு செய்த நாள்
09
ஆக
2024
11:08
அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கத்தில், தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் ஆடிப்பூரம் விழாவில், அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும். அவ்வகையில், நேற்று முன்தினம் காலை, மங்கள இசையுடன் விழா துவங்கியது. பின், மாலை ஆட்சீஸ்வர சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, கோவில் சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, இளங்கிளி அம்மனை வழிபட்டனர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் மற்றும் வளையல், தாலி கயிறு மற்றும் மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டன.