பதிவு செய்த நாள்
17
நவ
2012
10:11
சபரிமலை: சபரிமலையில் மண்டல கால பூஜை துவங்கியது. கோயிலை சுத்தமாக பராமரிக்க, "புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சபரிமலையின் புதிய மேல்சாந்தி தாமோதரன்போற்றி நடை திறந்ததும், மண்டல காலம் தொடங்கியது. நெய் அபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 41 நாட்கள் நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜைகள் நடக்கும். நேற்று நடை திறக்கப்பட்ட போது, பக்தர்களின் வரிசை சரங்குத்தியை தாண்டி நின்றது. மண்டல காலத்தின் முதல், களபாபிஷேகம் நேற்று நடந்தது. உச்சபூஜைக்கு முன்னோடியாக கோயில் முன் மண்டபத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு, களபபூஜை நடத்தினார். பின், மேல்சாந்தி தாமோதரன் போற்றி, கலசத்துடன் வலம் வந்து ஸ்ரீகோயிலில் அபிஷேகம் நடத்தினார்; உச்சபூஜை நடந்தது.
சுத்தம்...சுகாதாரம்: சன்னிதான சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க, இந்த ஆண்டும், "புண்ணியம் பூங்காவனம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பொருட்களை கண்ட இடங்களில் வீசி எறியாமல், ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போடும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.