பதிவு செய்த நாள்
14
ஆக
2024
04:08
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் ஆடி மாத முளைப்பாரி உற்ஸவ விழா கோலகாலமாக நடந்தது.
வண்ணாங்குண்டு தெற்கு மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் அம்மனுக்கு தீபாராதனைகளும் முளைப்பாரிகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. வண்ணாங்குண்டு தெற்கு கிராம கமிட்டி தலைவர் ரத்தினம் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாலையில் ஆயிரம் முளைப்பாரிகளை சுமந்து சென்ற பெண்கள் ஊருணியில் பாரிகளை கங்கை சேர்த்தனர்.
* திருப்புல்லாணி தெற்கு ரத வீதியில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஆக. 4 என்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளை பக்தர்கள் செய்தனர். ஏற்பாடுகளை திருப்புல்லாணி தெற்கு தெரு மக்கள் செய்திருந்தனர்.
* திருப்புல்லாணி அருகே மேற்கு மொத்தி வலசையில் உள்ள காந்தாரி அம்மனுக்கு முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. நேற்று காலையில் பால்குடம், காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேற்கு மொத்தி வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* நையினாமரைக்கான் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. அம்மன் கரகத்திற்கு முன்பாக பாரி சுமந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இளைஞர்களின் ஒயிலாட்டம் நடந்தது. பாரி மாலையில் நையினாமரைக்கான் ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை யாதவ சமுதாய கிராம மக்கள் செய்திருந்தனர்.
* உத்தரவை கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. சக்தி கரகம் முன்னே செல்ல முளைப்பாரி சுமந்து கிராம மக்கள் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்து மாலையில் பாரியை ஊருணியில் கங்கை சேர்த்தனர். ஏற்பாடுகளை கிராம தலைவர் வடிவேலு, துணைத்தலைவர் சரவணன், செயலாளர் ஆனந்த், ஊராட்சித் தலைவர் கணேஷ் உட்பட விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
* பத்திராதரவை முத்துமாரியம்மன் கோயில் மற்றும் புதூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா கோலாகலமாக நடந்தது. கிராம மக்கள் புத்தாடை அணிந்து பொங்கலிட்டனர். கோயில் வளாகம் முழுவதும் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது.