பதிவு செய்த நாள்
16
ஆக
2024
11:08
கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம், பல்லடம் கடைவீதி என்.ஜி.ஆர்., ரோட்டில் அமைந்துள்ளது பொங்காளி அம்மன் கோவில். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மூலவராக அருள்மிகு பொங்காளி அம்மன் அருள்பாலிக்கிறார். பல்லடம் வட்டாரப் பகுதி மக்களுக்கு காக்கும் தெய்வமாக பொங்காளி அம்மன் விளங்கி வருகிறார்.
திருவிழாக்கள்; ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், அஷ்டமி, சஷ்டி, கிருத்திகை, சதுர்த்தி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். மேலும், தமிழ் புத்தாண்டு, ஆடி மாத வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, கார்த்திகை ஜோதி, சிவராத்திரி, தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும், சத்ய சாயி சேவா சமிதி சார்பில், மார்கழி மாத உற்சவ விழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவில் அமைப்பு; கோவில் நுழைவாயிலில் சித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். மூலவர் பொங்காளியம்மன் எட்டு கைகளுடன் கும்பம், வேல், அமிர்த கலசம், சூலம் உள்ளிட்டவற்றை ஏந்தியபடி, சிம்ம வாகன பீடத்தின் மீது அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் பேச்சியம்மன், கருமையம்மன், விஷ்ணு துர்க்கை, கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானை சமேத சோமஸ்கந்தர், காசி விசாலாட்சி, நவக்கிரகங்கள், காலபைரவர், நீலகண்டன் நீலகண்டி, அஷ்டதிக் பாலகர்கள், துவார பாலகர்கள் மற்றும் கொடி மர கணபதி ஆகிய பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
சிறப்பு; வீடு மனை யோகம், புத்திர பாக்கியம், கடன் பிரச்னை, திருமண பாக்கியம் ஆகியவை பொன்காளி அம்மன் அருளால் நிறைவேறுவதுடன், நினைத்த காரியம் வெற்றிபெறும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அமைவிடம்; கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பல்லடம் நால்ரோடு சிக்னலில் இருந்து, அவினாசி செல்லும் ரோட்டில், 200 மீ., தொலைவில் கடைவீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.
வரலாறு; பொங்காளியம்மன் கோவில், 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. சோழர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த வரலாறுகள், ஆவணங்கள் எதுவும் இல்லை. முன்னொரு காலத்தில், வழிப்போக்கர் ஒருவர் அம்மன் சிலையை எடுத்து வந்ததாகவும், பல்லடத்தில் ஓய்வு எடுக்கும் போது சிலையை எடுக்க முடியாமல், வழிபாட்டுக்காக இங்கேயே விட்டுச் சென்றதாகவும் ஒரு வரலாறு உள்ளது. இதேபோல், சோழர் காலத்தில், நகரமயமாக்கலின் போது இங்கிருந்த வனப்பகுதி அழிக்கப்பட்டு துர்க்கை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், பின்நாளில், பொங்காளி அம்மனாக பெயர் பெற்றதாகவும் மற்றொரு வரலாறு கூறப்படுகிறது. 1975ம் ஆண்டு வரை கோவிலில் தேர் இருந்ததாகவும், தேர் திருவிழா கோலாகலமாக நடந்து வந்ததாகவும் தகவல் உள்ளது. இதேபோல், கோவிலில், வட்ட வடிவ குண்டம் இருந்ததாகவும், குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வந்ததாகவும் முன்னோர்கள் கூறுகின்றனர். கிடா, கோழி, எருமை என, முப்பலி கொடுக்கும் சடங்குகள் இங்கு நடந்து வந்ததாகவும் செவிவழி செய்திகள் கூறுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் கோவிலை புதுப்பிக்க முயன்று அஸ்திவாரம் தோண்டும் போது, ரோமானிய நாட்டு நாணயங்கள் பூமியில் கிடைத்ததாகவும் தகவல் உள்ளது. கடந்த காலத்தில், கோவிலின் எதிர் திசையில் உள்ள கிணற்றில் இருந்து பொங்காளி அம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் நடந்து வந்துள்ளது. இன்று அந்த கிணறு குப்பை கொட்ட பயன்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. பழமையான இக்கோவில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. தற்போது, பக்தர்கள் பலரின் முயற்சியால் கோவிலில் திருப்பணி துவங்கி நடந்து வருகிறது. கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டவும் தீர்மானிக்கப்பட்டு, இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில், ராஜகோபுரத்துடன், கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.