பதிவு செய்த நாள்
16
ஆக
2024
12:08
கோவை ; ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவை நேரு ஸ்டேடியம் ஆடிஸ் வீதி மாங்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் மஞ்சள் காப்பு மற்றும் வெள்ளி கவசத்துடன் புஷ்ப அலங்காரத்தில் கருமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் அருளை பெற்றனர்.
ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, ஹவுஸ்சிங் யூனிட் பேஸ் 2வில் உள்ள, ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், காலை அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1ல் உள்ள, கம்பீர விநாயகர் கோவிலில் உள்ள , புவனேஸ்வரி அம்மனுக்கு , ஆடி வெள்ளி முன்னிட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. சுந்தராபுரம் - சாரதாமில் ரோட்டில் உள்ள, முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. வெள்ளலுார் அசோகர் வீதியில் உள்ள, முத்தாலை அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு, அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. வெள்ளலுார், வெள்ளாளபாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், கொற்றவை நாச்சியார் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
வெள்ளலூர் மாசாணியம்மன் கோவிலில், மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. வெள்ளலுார் கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில், அம்மன் பூ அலங்காரத்தில் அருள்பாலித்தார். வெள்ளலுாரில் உள்ள பேச்சியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி முன்னிட்டு, காலை முதல் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல், கோவை நகரில் பெரியகடைவீதி, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி குளக்கரையில் உள்ள பொங்காளியம்மன் கோவில், ஈச்சனாரியில் உள்ள, மகாலட்சுமி மந்திர், பேரூர் ரோடு எல்.ஐ.சி., காலனியில் உள்ள, எல்லை மாரியம்மன் கோவில், செல்வபுரம், தில்லைநகரிலுள்ள, முத்துமாரியம்மன் கோவில். தடாகம் ரோடு, ராயபுரம் தண்டுமாரியம்மன் கோவில், உள்ளிட்ட நகர் மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடிவெள்ளி முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.