திருப்புத்தூர் ஆலமரத்து காளியம்மன் கோயில் ஆடி வெள்ளி திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2024 03:08
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஆலமரத்து காளியம்மன் ராஜகாளியம்மன் கோயிலில் இன்று கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். காவடி எடுத்து,அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். திருப்புத்தூர் நகரின் மேற்கு எல்லை காவல் தெய்வமாக காளியம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ஆடி மாதம் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் விழா எடுக்கின்றனர். இன்று கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு காலை 8:45 மணிக்கு செட்டியதெரு ராமர் மடத்திலிருந்து 1000க்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோயில் வந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் நீண்ட அளவிலான வேல், திரிசூலம் அலகு குத்தியும், சர்ப்ப, மயில்,பறவைக்காவடிகள் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் கோயில் முன்பாக பூக்குழி இறங்கி தீ மிதித்தும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பன்முகத் தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதான பூஜை நடந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.