பதிவு செய்த நாள்
16
ஆக
2024
03:08
மானாமதுரை; மானாமதுரை கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் விஸ்வகர்மா அக்கசாலை, அன்னதான பிள்ளையார் அறக்கட்டளை,இளைஞர் பேரவை அன்னதான குழு சார்பில் 156 ஆம் ஆண்டு பொங்கல்,முளைப்பாரி, ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகு குத்தி பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர்.
திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்டோர் கடந்த 9ம் தேதி கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். இதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மனுக்கு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கும்மிப்பாட்டு பாடியும் அம்மனை வேண்டினர். இன்று பொங்கல்,முளைப்பாரி,ஆடி வெள்ளியை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு வைகை ஆற்றுக்குச் சென்று பக்தர்கள் அலகு குத்தி, பால் குடங்களோடு நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து பின்னர் கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கினர்.பின்னர் கோயில் முன்பாக பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.