ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருகே புதுஅத்திக்கோம்பை மஹா கணபதி, பஞ்சமுக மஹா கணபதி, பாலமுருகன், மஹாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
கும்பாபிஷேக விழா பூஜைகள் ஆக.19 காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து மஹாசங்கல்பம், புண்யாக வாசகம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை நடந்தது. அன்று மாலை ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து கரகாட்டம், வானவேடிக்கை, தேவராட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் புண்ணிய தீர்த்த காவடிகள் புறப்பட்டு ஊர்வலமாக புதுஅத்திக்கோம்பை மாகாளியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தது. ஆக.20 காலை தீர்த்தம் செலுத்துதல், தீர்த்த சங்கிரஹனம், யாகசாலை அலங்காரம் நடந்தது. அன்று மாலை மங்கள இசையுடன் முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேசப்பலி, கும்பாலங்காரம், முதற்கால யாக பூஜை ஆரம்பமானது. நேற்று காலை விசேஷ சந்தி, புதிய விக்ரகங்களுக்கு கண் திறப்பு, இரண்டாம் கால யாக பூஜை, சூரிய பூஜை, காயத்ரி மந்திரகோமங்கள் நடந்தது. மதியம் விசேஷ திரவியங்கள் ஹோமம், அன்று மாலை மூன்றாம் காலயாக பூஜை தொடங்கியது. இன்று காலை மங்கள இசை நான்காம் காலையாக பூஜை தொடங்கியது. கும்பங்கள் திருக்கோயிலை வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து மஹாகணபதி, பஞ்சமுக மஹாகணபதி, பாலமுருகன், மஹாகாளியம்மன் கோவில் விமான கோபுரங்களில் சிவாச்சாரியார்களால் புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டு , விபூதி, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. புதுஅத்திக்கோம்பை மற்றும் குழந்தைவேல்கவுண்டன்புதூர் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.