திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் நாட்டார்மங்கலத்தில் சங்கிலிக்கருப்பர், நொண்டிக்கருப்பர், பெருமாண்டியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
நாட்டார்மங்கலத்தின் கிராம தெய்வங்களான கருப்பர்,பெருமாண்டியம்மன் கோயில்களுக்கு திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கிராம தேவதைகள் பிரார்த்தனையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து முதற்காலயாக சாலை நடந்து பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை கோபூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. பின்னர் இரண்டாம் யாகசாலை பூஜை முடிந்த பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து காலை 10:15 மணிக்கு கருப்பருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கலசங்களுக்கும் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், திருப்பத்தூர் ஒன்றியத் தலைவர் எஸ்.சண்முகவடிவேல், ஊராட்சி தலைவர் திலகவதிபாண்டியன் பங்கேற்றனர். சுற்றுப்புறக் கிராமத்தினர் பட்டு எடுத்து வந்தனர். ஏற்பாட்டினை சங்கிலிகருப்பர் கோயில் பங்காளிகள், கிராமத்தினர் செய்தனர்.