மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவென்னீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சமயக்குறவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் திருமண கோலத்தில் காட்சியளித்த ஸ்தலமாகவும், துணைவியாருடன் சிவசோதியில் கலந்து அருளிய சிறப்புமிக்க கோவிலாக திகழ்கிறது. இக்கோவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 20ம் தேதி முதல் காலை யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது. இன்று 6ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு சிவ வாத்தியங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. அதனை அடுத்து தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேகத்தில் செங்கோல் ஆதீனம் 103 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28வது குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது குருமகாசந்நிதானம் நாகராஜ் சுவாமிகள், நாச்சியார் கோவில் ஆதீனம், திருப்பனந்தாள் காசிமடத்து இளைய அதிபர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள், சென்னை மகாலட்சுமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் கும்பாபிஷேகத்திற்கு கலந்து கொண்ட பக்தர்கள் ஆபத்தை உணராமல் சாரத்தின் வழியாக கோபுரத்தின் மீது ஏறி தரிசனம் செய்தது காண்போரை பதை பதைக்க செய்தது.