திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா; கொடி பட்டத்துடன் வீதி உலா வந்த யானை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2024 05:08
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா துவங்க உள்ளதை முன்னிட்டு இன்று மாலை, கொடி பட்டத்துடன் யானை வீதி உலா வந்தது. நாளை ஆக.24ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா நாளை (24ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது. விழாவை முன்னிட்டு இன்று மாலை, கொடி பட்டத்துடன் யானை வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய நிகழ்ச்சியாக 28ம் தேதி இரவு 7:30 மணிக்கு குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆகஸ்ட் 29ம் தேதி காலையில் கோரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வருதல், 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சண்முக பெருமானின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அன்று மாலை 4:30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். ஆகஸ்ட் 31ம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 2ம் தேதி காலை நடைபெறுகிறது.