திரவுபதி அம்மன் கோயில் விழாவில் சுபத்திரை திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2024 12:08
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழாவையொட்டி நடைபெற்ற சுபத்திரை, அர்ச்சுனன் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஆக. 9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தருமர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ராபர்ணகோட்டை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில், விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ஆதிமுத்தன் குடியிருப்பு கிராமத்தார்களின் மண்டக படி நிகழ்வாக, சுபத்திரை, அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக மகாபாரதம் பக்தர்களுக்கு போதிக்கப்பட்டது. தொடர்ந்து, கிராமத்தார்கள் சார்பில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பின்பு திருமண கோலத்தில் சுபத்திரை அர்ச்சுணருடன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் தொடர்ச்சியாக, முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.30ல் நடைபெறுகிறது.