வைத்தீஸ்வரன் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2024 11:08
மயிலாடுதுறை; வைத்தீஸ்வரன் கோவிலில் ஆவணி மாத கார்த்திகை திருநாளை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு அறுபடை வீடுகளுக்கு இணையாக செல்வ முத்துக்குமாரசுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கார்த்திகை தோறும் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆவணி மாத கார்த்திகை திருநாளான இன்று செல்வ முத்துக்குமார சுவாமியை கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்