கோகுலாஷ்டமி; கோவில்களில் சிறப்பு வழிபாடு
பதிவு செய்த நாள்
26
ஆக 2024 02:08
ரெட்டியார்சத்திரம்; ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு, திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தர்மத்துப்பட்டி சக்தி விநாயகர் கோயிலில், விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் சார்பில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. 28 குழந்தைகள், கிருஷ்ணன், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். குழந்தைகளுக்கு பரிசுகள், இனிப்பு வழங்கி கொண்டாடினர். சின்னாளபட்டி: பிருந்தாவன தோப்பு லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில், வேணுகோபால சுவாமிக்கு பன்னீர், சந்தனம், கரும்புச் சாறு, பால், தயிர், தேன் உள்பட 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. கிருஷ்ணர் அலங்காரத்தில், விசேஷ பூஜைகள் நடந்தது.
|