காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
பதிவு செய்த நாள்
28
ஆக 2024 11:08
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில், மஹா சம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில், 2007ம் ஆண்டு, மார்ச் 25ல் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலை புதுப்பித்து மஹா சம்ப்ரோக் ஷணம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கோவில் ராஜகோபுரம், பிற சன்னிதிகள், கோவில் வளாகம் தரை பகுதி என, பல்வேறு திருப்பணிகள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. மஹா சம்ப்ரோக்ஷணத்தையொட்டி திருவாராதனம், விஷ்வசேனர் அனுக்ஞை மரியாதை, வேதப்ரபந்த தொடக்கம், அங்குரார்ப்பணம் உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து, ரஷாவந்தனம், கும்பஸ்தாபவனம், ப்ராண பிரதிஷ்டை, ஹோமமும், மாலை ஹோமம்- பூர்ணாஹுதி, வேதப்ரபந்த சாத்துமறை உள்ளிட்டவை நடந்தது. நேற்று காலை, ஹோமம், பூர்ணாஹுதி, வேதப்ரபந்த சாற்றுமறையும், மாலை ஹோமும், பூர்ணாஹுதி, வேதப்ரபந்த சாற்றுமறை உள்ளிட்டவை நடைபெற்றது. மஹா சம்ப்ரோக் ஷண தினமான இன்று காலை 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் மஹா சம்ப்ரோக்ஷணம் என அழைக்கப்படும் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து வேதபிரபந்த சாற்றுமறையும், மாலை 6:30 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. மஹா சம்ப்ரோக் ஷண விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் சா.சி.ராஜமாணிக்கம், பரம்பரை அறங்காவலர்கள் கோ.க.வா.அப்பன் அழகியசிங்கர், கோமடம் ரவி, போரகத்தி பட்டர் ரகுராம், கோவில் பட்டாச்சாரியார்கள், கைங்கர்யபரர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.
|