சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி கிருஷ்ண யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2024 04:08
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வேதாத்யயன சபை சார்பில் கிருஷ்ண யாகம் 3 நாட்கள் கோலாகலமாக நடந்தது. பரமக்குடியில் வேதாத்யயன சபையின் 80வது ஆண்டு விழா மற்றும் உலக நன்மைக்காக நடத்தப்படும் கிருஷ்ண யாகம் 70 வது ஆண்டு நிறைவு விழா நடந்தது. பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிருஷ்ண யாகம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி ஆக. 26 மாலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுக்கப்பட்டு, நகர் வலம் வந்து பெருமாள் கோயிலை அடைந்தது. பின்னர் முதல் கால யாக பூஜைகள் துவங்கி நடந்தது. தொடர்ந்து இன்று காலை 9:00 மணி தொடங்கி நடந்த யாகத்தில் நிறைவாக மதியம் 12:30 மணிக்கு 4 ம் கால யாக பூஜைகள், மகாபூர்ணாகுதி நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் 1944 ல் துவக்கப்பட்ட வேதாத்யயன சபையின் 80வது ஆண்டு நிறைவையொட்டி, சிறப்பு ஹோமங்கள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை வேதாத்யயன சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.