பதிவு செய்த நாள்
02
செப்
2024
06:09
கோவை; ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு, மருதமலை ரோடு சந்திப்பில் பழமை வாய்ந்த காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ள, கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
கோவை காஞ்சி காமகோடி பீடம் தலைமை அர்ச்சகர் சிவக்குமார் முன்னிலையில் மகா கும்பாபிஷேக விழா யாகங்கள் நடந்தன. கடந்த, 30 ம் தேதி காலை 6:00 மணிக்கு முகூர்த்த கால் நடுதல் நிகழ்வுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மறுநாள் காலை 7:00 மணிக்கு மங்கல இசையுடன் மகா கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல் நடந்தன. மாலை, 4:00 மணிக்கு லாலிரோடு ஊர் விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்து, சுவாமி ஊர்வலமாக அழைத்து வருதல் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு விக்னேஸ்வரா பூஜை, வாஸ்து பூஜை, பிரவேச பலியுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நடந்தது. மகா தீபாராதனையை தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. மதுரை அழகர் கோயில், 18 ம் படி, கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து ராக்காயி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு காலை, 7:50 மணிக்கு கோபுர விமானத்தில் உள்ள கும்பத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு மகா அபிஷேகம், சங்கிலி கருப்பராயன் மற்றும் பரிவார தெய்வங்கள் கணபதி, கன்னிமார், முனியப்பன் ஆகிய தெய்வங்களுக்கு, ராக்காயி தீர்த்தம் ஊற்றப்பட்டு, மகா அபிஷேகம் அலங்கார தீபாரதனை காட்டப்பட்டது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு மகா அன்னதானம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா மற்றும் வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.