பதிவு செய்த நாள்
23
செப்
2024
12:09
திருப்போரூர்; திருப்போரூரில் பிரசித்திபெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத கிருத்திகை விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் கிருத்திகை வந்ததால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். முடி காணிக்கை செலுத்தி, சரவணப் பொய்கையில் நீராடி, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து, கந்த பெருமானை தரிசனம் செய்தனர். மாலையில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாட வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவில், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார், போக்குவரத்து சரிசெய்தல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.