பதிவு செய்த நாள்
24
செப்
2024
10:09
திருப்பூர்; ‘‘இறைவன் திருவடியைப் பற்றி, அவரது திருவடியை அடைய வேண்டுதல் வைக்க வேண்டும்,’’ என, வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். திருப்பூர், காங்கயம் ரோடு, காயத்ரி மகாலில் மூன்று நாள் பக்தி சொற்பொழிவு நேற்று துவங்கியது. முதல் நாளில், ‘உலகமளந்த பொன்னடி’ என்ற தலைப்பில், வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது: இன்றைய முதியோர் தாங்கள் அறிந்த, புரிந்த ஆன்மிக விஷயங்களை தங்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். சொத்துகள் வாரிசுகளுக்கு முறைப்படி சென்று விடும். ஆனால், தர்மம், கலாசாரம், பக்தி, ஆத்மார்த்த சிந்தனை போன்றவற்றை நாம் முறையாக அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும்.
எத்தனையோ பாடங்கள், பயிற்சிகள் இன்றைய குழந்தைகளுக்கு பெற்றோர் அளிக்கின்றனர். எவ்வளவு கொள்ளுமோ அதைத் தான் தர வேண்டும். அவை நல்ல விஷயங்களாக இருக்க வேண்டும். இதனை வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். அப்படித்தான் அந்த பெருமானுடைய திருவடியின் சிறப்பு குறித்தும் நாம் அறிந்து கொண்டதை அவர்களுக்கும் புரியும் விதமாக சொல்ல வேண்டும். அந்த பெருமான் தான் ஆண்டான்; நாமெல்லாம் அவரது அடிமைகள் தான். அவரது திருவடியைப் பற்றிய அடிமைகள் தான். ஒரு தாய் உறக்கத்தில் உள்ள தன் குழந்தையை, அது கேட்காமல் கூட, எப்படி அரவணைத்து பாதுகாக்கிறாளோ அது போல் பெருமான் நம்மை பாதுகாக்கிறார். நாம் அவரைக் கேட்கவும் இல்லை; நாம் அதை உணரவும் இல்லை; இதற்காக நாம் நன்றியும் சொல்லவில்லை.பகாவனின் திருவடிகளைப் பற்றி, அந்த திருவடிகளை அடைவதையே நாம் கேட்டுப் பெற வேண்டும். இதற்கு ஆச்சார்யார்களை வணங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.