பதிவு செய்த நாள்
24
செப்
2024
11:09
மானாமதுரை; மானாமதுரையில் நவராத்திரி விழாவில் வீடுகள் மற்றும் கோயில்களில் வைத்து வழிபடக்கூடிய கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானோர் கொலு பொம்மைகளை வாங்கி சென்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் களிமண்ணாலான மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் அக்.3ம் தேதி துவங்க உள்ள நவராத்திரி விழாவிற்காக சுவாமி சிலைகள், திருப்பதி பிரமோற்சவ சிலைகள், அத்தி வரதர் சிலை,அர்த்தநாரீஸ்வரர், சங்கரநாராயணன்,அழகர் சுவாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்,தேரோட்டம், மனுநீதிச் சோழன், தலைவர்கள்,தியாகிகள் சிலைகள்,பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள்,ஆண்டாள் பொம்மைகள் என வீடுகள் மற்றும் கோயில்களில் வைக்கப்படும் கொலுவை அலங்கரிக்கக்கூடிய கொலு பொம்மைகள் மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதனை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வாங்கி சென்று வருகின்றனர். இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது, மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருள்களுக்கு என்று தனி மவுசு உள்ளது.அதற்காகவே வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தரத்தோடும், கலைநயத்தோடும் தயார் செய்து வருகிறோம். தற்போது வரவுள்ள நவராத்திரி விழாவிற்காக ரூ.50 லிருந்து ரூ.2 ஆயிரம் வரையிலான கொலு பொம்மைகள் தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம். இன்னும் சில தினங்களில் மேலும் பல்வேறு வடிவங்களில் பல்வேறு வகையான கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்தனர்.