பதிவு செய்த நாள்
24
செப்
2024
03:09
உடன்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் அக். 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வரும் அக்.3ம் தேதி காலை 5 மணிக்கு யானையில் கொடி பட்டம் ஊர்வலம், காலை 6 மணி, சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடக்கிறது. அம்மன் வீதி உலா , கொடியேற்றம் நடந்தவுடன் கோயில் பூசாரி பக்தர்களுக்கு காப்பு கட்டி வேடம் அணியும் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை பிரிக்க துவங்குவார்கள். இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதியுலா நடக்கிறது. அக். 4ம் தேதி முதல் அக் .11ம் தேதி வரை தினமும் பல்வேறு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது.
மகிஷா சூரசம்ஹாரம்; தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் அக். 12ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. அக் .13ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோயிலில் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனையும் தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளி கோயில் கலையரங்கம் வந்தடைந்தும் அபிஷேக ஆராதனை, முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் பவனி, அன்னதானமும், கோயில் வந்து சேர்ந்தவுடன் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது.