திருச்செந்துார் கோயில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2024 03:09
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பக்தர்கள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில், 200 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. அறநிலையத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் உள்ள 9 கலசங்கள் ஆகம விதிமுறைப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி கீழே கொண்டு வரப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் செய்யப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட 9 கலசங்கள் ராஜகோபுரம் கீழ்பகுதியில் வைத்து புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கும்ப கலசங்களை பண்ருட்டியைச் சேர்ந்த ஸ்தபதி சரவணன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் புதுப்பித்து வருகின்றனர். செம்புகளால் ஆன கலசத்தில் 11 அடுக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 9 கலசங்களை புதுப்பிக்கும் பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கலசங்களில் உள்ள அழுக்கு தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. புதுப்பிக்கும் பணிகளை கோவில் தக்கார் அருள்முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோவில் இணை கமிஷனர் ஞானசேகரன், தூத்துக்குடி மண்டல துணை கமிஷனர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.