பதிவு செய்த நாள்
04
அக்
2024
11:10
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை நேற்று நடந்தது. தொடர்ந்து, உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன.
15 நாள்; இதை, அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், உஷாரவி, சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இவ்விழா, வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை 6:30 மணிக்கு உற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் மட்டும், 9 நாட்களுக்கு பதிலாக, 15 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று துவங்கிய நவராத்திரி விழா, வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கும். மேலும், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளுக்கு, தினமும் 6:30 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும்.
ஆர்.கே.பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரிக்கல் குமரேசகிரி மலைக்கோவிலில், நேற்று நவராத்திரி உற்சவம் துவங்கியது. வரும் 12ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று, லட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இன்று ராஜேஸ்வரியம்மன் அலங்காரத்திலும், நாளை கனக துர்க்கை அலங்காரத்திலும் அருள்பாலிக்க உள்ளார்.