பொன்னூத்தம்மன் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2024 03:10
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பொன்னூத்தம்மன் கோவிலுக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்களும், வனத்துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வரப்பாளையம் அருகே உள்ள பொன்னூத்தம்மன் கோவில் வளாகத்தில் இரவு காட்டு யானைகள் நுழைந்தன. அங்குள்ள அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை கீழே இழுத்து போட்டு சேதப்படுத்தின. மேலும், சமையல் அறையின் கதவை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருள்களை தின்று சேதப்படுத்தியது. காலை கோவிலுக்கு வந்த பூசாரி, இது குறித்து கோவை வனத்துறையிருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.