ரிஷிவந்தியம்; சூளாங்குறிச்சி சுப்ரமணி சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா இன்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் பழமை வாய்ந்த வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நடந்த மண்டல பூஜையில் தினமும் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாளான இன்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சியில், விக்னேஷ்வர பூஜை, கலச ஆவாகணம், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, விநாயகர், மூலவர் சுப்ரமணியர், துர்கையம்மன், தட்சணாமூர்த்தி, கடம்பன், இடும்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.