பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்கள். இங்கு எல்லா ஆண்டும் துர்காஷ்டமி நாவராத்திரி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், தொடர்ந்து "வாகச்சார்த்து என்ற சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.
7.10 மணிக்கு உற்சவ அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கரியன்னூர் நாராயணன் நம்பூதிரியின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்துமணி குடை சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி என்ற நிகழ்வு நடந்தது. தொடர்ந்து 10.30 மணிக்கு பெருவனம் குட்டன் மாரார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சரி மேளம் என அழைக்கும் செண்டை மேளம் கொட்டும் நிகழ்வு நடந்தது. இதை ஏராளமானோர் ரசித்து மகிழ்ந்தனர். மாலை 3:30 மணிக்கும் ஐந்து யானைகள் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி நிகழ்வு நடந்தது. மாலை 6:30-க்கு நிறமாலை தரிசனம், நாதஸ்வர கச்சேரி, உற்சவர் எழுந்தருளும் வைபவம் ஆகியவை நடந்தது.