பதிவு செய்த நாள்
16
அக்
2024
10:10
சபரிமலை; ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. நாளை காலை புதிய மேல் சாந்தி தேர்வுக்கான குலுக்கல் சன்னிதானத்தில் நடைபெறும்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கப்படும். பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். காலை 7:30 க்கு உஷபூஜைக்கு பின்னர், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்திற்கான மேல் சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வானவர்கள் பட்டியலில் இருந்து ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இவர் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி ஐயப்பனுக்கு பூஜைகளை செய்வார். இதுபோல மாளிகைபுறத்தம்மன் கோயிலிலும் மேல் சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறும். வரும் 21 வரை சபரிமலை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் காலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜையும் உண்டு. 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டல மகர விளக்கு காலம் நெருங்கி வரும் நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலக்கலில் கூடுதலாக 2000 வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரப்பர் மரங்கள் வெட்டப்படுகிறது.