சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2024 04:10
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பில் முளைப்பாரி உற்சவ விழாவில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி ஓடுகளை சுமந்து சென்றனர்.
மானாமதுரை அருகே அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் வருடந்தோறும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் கிராம முன்னேற்றத்திற்காகவும் முளைப்பாரி உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முளைப்பாரி உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் இரவு முளைக்கொட்டு திண்ணையில் ஏராளமான பெண்கள்,சிறுமிகள் கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டு வந்தனர்.இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சட்டி சோறு எடுத்து வந்து சுவாமிகளுக்கு படையலிட்டனர். பின்னர் இன்று நன்றாக வளர்ந்திருந்த முளைப்பாரி ஓடுகளுக்கு பூஜைகள் செய்த பின் பெண்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரி ஓடுகளை தலையில் சுமந்து சென்று கண்மாயில் கரைத்தனர். கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு கிராம மக்கள் செய்திருந்தனர்.