பதிவு செய்த நாள்
17
அக்
2024
07:10
திருவண்ணாமலை; மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல, திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், பவுர்ணமி கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் விட்டு விட்டு கன மழை பெய்து வந்ததாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், திருவண்ணாமலையில் கன மழை பெய்யும் என, ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டிருந்ததால், மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனும், மழையால் பக்தர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, பவுர்ணமி கிரிவலம் செல்வதை பக்தர்கள் தவிர்க்க, வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், நேற்று காலை முதலே மழை முற்றிலும் நின்று வெயில் அடிக்க தொடங்கியது. இதனால், புரட்டாசி மாத பவுர்ணமி திதி நேற்றிரவு, 7:56 முதல் தொடங்கி இன்று மாலை, 5:25 மணி வரை உள்ள நிலையில், நேற்று மாலை முதலே, பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் செல்ல தொடங்கினர்.