பதிவு செய்த நாள்
17
அக்
2024
07:10
தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரியகோவிலில் மாததோறும் பவுர்ணமி நாளில் வலம் நடந்தது. கடந்த சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக கிரிவலம் தடைப்பட்டது. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து அரண்மனை தேவஸ்தானம், இந்திய தொல்லியல்துறை அனுமதியுடனும், மாநகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகளுடன் கடந்த செப்டம்பர் மாதம் கிரிவலம் துவங்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டாவது பவுர்ணமி வலத்திற்கு, திரு தென்கயிலாய வலம் என பெயர் சூட்டப்பட்டது. இந்த திரு தென்கயிலாய வலம் நேற்று மாலை 6: 00 மணிக்கு துவங்கி இன்று(17ம் தேதி) காலை 6:00 மணி வரை நடந்தது. இதில், சிவவாத்தியங்கள் இசைக்க, யானையுடன் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு கோவில் வலபாதையை சுற்றி வந்தனர். இதற்காக மாநகராட்சி சார்பில், பக்தர்கள் வலம் வரும் பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, மின்விளக்கு வசதி, அமருவதற்கு இருக்கைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. மேலும், இலவச மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ் வசதியும் தயார் நிலையில் இருந்தது. தொடர்ந்து நேற்று மாலை தென்கயிலாய வலத்தில், மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம், அரண்மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதயவிழாக்குழு தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.