பதிவு செய்த நாள்
17
அக்
2024
07:10
மைசூரு; மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் மீதான திருஷ்டி நீங்குவதற்காக, சாமுண்டி மலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மைசூரு தசராவின் சிகர நிகழ்ச்சியாக நடக்கும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை யானை சுமந்து செல்லும். சாலையின் இருபுறமும் கூடி நிற்கும் மக்கள், யானை மீது இருக்கும் அம்மனை தரிசிப்பர். தசரா முடிந்த ஐந்து நாட்களுக்குள், சாமுண்டி மலையில் தேரோட்டம் நடக்கும். ஜம்பு சவாரியின் போது அம்மன் மீது விழுந்து இருக்கும் திருஷ்டியை நீக்குவதற்கு தேரோட்டம் நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதன்படி நேற்று காலை 9:15 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., – எம்.எல்.ஏ., ஜி.டி., தேவகவுடா, வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். கோவிலை சுற்றி வந்த தேரில் இருந்த அம்மனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக வந்தும், அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். யதுவீர் – திரிஷிகா குமாரிக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இருப்பதால், மன்னர் குடும்பத்தில் இருந்து யாரும், தேரோட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இன்று இரவு 7:00 மணிக்கு சாமுண்டி மலையில் உள்ள, தேவிகெரே குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.