பதிவு செய்த நாள்
17
அக்
2024
08:10
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்திற்கான புதிய மேல் சாந்தி தேர்வு செய்யப்பட்டனர்.
நேற்று மாலை, 5:00 மணிக்கு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடைதிறந்து விளக்கேற்றியதும் பக்தர்கள் 18 படிகள் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திருநீறு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மேல் சாந்தி கோவில் முன்புறமுள்ள ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு மூலவருக்கு அபிஷேகம் நடத்தி, நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் துவங்கியது. காலை, 7:30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கான மேல்சாந்தியை தேர்வு செய்யும் குலுக்கல் தேர்வு நடைபெற்றது. இதில் கேரளா, கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அருண் குமார் நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரம் கோவிலில் நடைபெற்ற குலுக்கல் தேர்வில் கோழிக்கோடு வாசுதேவன் நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி ஐயப்பனுக்கு பூஜைகள் செய்வார். அக்., 22 வரை நடை திறந்திருக்கும். தினமும் காலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு, 7:00க்கு படி பூஜை, இரவு 9:00க்கு அத்தாழ பூஜை நடக்கும். ஐப்பசி மாத பூஜைகள் முடிவடைந்து அக்., 25 இரவு 10:00க்கு நடை அடைக்கப்படும்.