பதிவு செய்த நாள்
18
அக்
2024
12:10
மேல்மருவத்துார்; மேல்வருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில், பங்காரு அடிகளார் திருவுருவச்சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில், பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை விழா, கடந்த 16ம் தேதி குருபீடத்தில் துவங்கியது.
வழிபாடு; கருவறையில், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலாங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சித்தர்பீடம் வந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு, சித்தர் பீடத்தில் கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதன்பின், குரு பீடத்தில் பங்காரு அடிகளார் திருவுருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, லட்சுமி பங்காரு அடிகளார் தீபாராதனை காட்டி வழிபட்டார். கருவறையில் ஏற்றப்பட்ட அருள்ஞான தீபம், சித்தர்பீடம் முழுதும் வலம் வந்து, ஓம்சக்தி மேடை முன், பக்தர்களின் வழிபாட்டிற்காக பொருத்தப்பட்டது.
வேள்வி பூஜை; தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மன் கருவறை, குரு பீடத்தின் முன், யாககுண்டங்கள் அமைத்து, முதல் கால வேள்வி பூஜை நடந்தது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ் மற்றும் ஸ்ரீலேகா செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரண்டாம் கால வேள்வி பூஜையும், நாளை குடமுழுக்கும், பங்காரு அடிகளார் திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கின்றன.