பதிவு செய்த நாள்
18
அக்
2024
01:10
சபரிமலை; சபரிமலை மற்றும் மாளிகைபுறம் கோவில்களுக்கு புதிய மேல் சாந்திகள், நேற்று காலை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக்கொள்வர்.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 25 பேரின் பெயர், துண்டு சீட்டுகளில் எழுதப்பட்டு, ஒவ்வொரு சீட்டாக சுருட்டி ஒரு வெள்ளி பாத்திரத்தில் போடப்பட்டது. மற்றொரு வெள்ளி பாத்திரத்தில், 24 வெள்ளை துண்டு காகிதங்களும், ஒரு துண்டு தாளில் மட்டும் மேல் சாந்தி எனவும் எழுதப்பட்டு, சுருட்டி போடப்பட்டது. பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் வர்மா, இரண்டு வெள்ளி பாத்திரங்களில் இருந்தும், இரண்டு துண்டு சீட்டுகளை எடுத்தார். 16வது துண்டு சீட்டில், கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரையைச் சேர்ந்த எஸ். அருண்குமார் நம்பூதிரி பெயர் வந்தது. அப்போது, மற்றொரு வெள்ளி பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சீட்டில், மேல் சாந்தி என்று வந்ததால், அவர் சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அதுபோல, மாளிகைபுறத்தம்மன் கோவிலுக்காக தயாரிக்கப்பட்ட, 15 பெயர்கள் குலுக்கப்பட்டு, சிறுமி வைஷ்ணவி சீட்டுகளை எடுத்தார். 13-வது சீட்டாக, கோழிக்கோடு மாவட்டம் உளவன்னா என்ற இடத்தை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரி, மேல் சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக்கொள்வர். அதன் பின், ஓராண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்வர்.