பதிவு செய்த நாள்
25
அக்
2024
03:10
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள சீதாராமர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. காரமடை அருகே மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லப்பனூரில் புதிதாக சீதா ராமர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவடைந்ததை அடுத்து, நிறைவு விழா நடந்தது. கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விஷ்வக்சேனர், ஆவாஹனம், புன்யா வசனம், கலச ஆவாஹனம் முடிந்தபின், மகா சுதர்சன ஹோமம், ஸ்ரீ சுத்த ஹோமம், புருஷ சுத்த ஹோமம் ஆகியவை நடைபெற்றன. மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீர்த்த பிரசாதம் வழங்கிய பின், பஜனை நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தி சொற்பொழிவு நடந்தது. இந்த மண்டல பூஜையில் மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மற்றும் சண்முகசுந்தரம், வேணுகோபால், கோவில் நிர்வாகிகள் சாம்ராஜ், துரைசாமி உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.