பதிவு செய்த நாள்
25
அக்
2024
05:10
மதுரை:தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், ஆகம விதிகளுக்கு புறம்பாக சிவலிங்கம், கோபுர கலசம் இடையே தற்போது அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் கூரையை அகற்ற தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
பட்டுக்கோட்டை சக்திபாபு தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிவலிங்கம், கூரையிலுள்ள கோபுர கலசம் இடையே தொடர்பு இருக்கும் வகையில், ஆகம விதிகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, சிவலிங்கம், கலசம் இடையே சிமென்ட் மூலம், கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது, ஆகம விதிகளுக்கு முரணானது. கலசம், மூலவர் இடையே தொடர்பு துண்டிக்கப்படுவதால், அபாயம் ஏற்படும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. சிவலிங்கம், கோபுர கலசம் இடையே கட்டப்பட்டுள்ள கூரையை அகற்றக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, தமிழக அறநிலையத்துறை கமிஷனர், கோவில் செயல் அலுவலர், மத்திய தொல்லியல் துறை மூத்த பாதுகாப்பு அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.