பதிவு செய்த நாள்
25
அக்
2024
05:10
பழநி; பழநி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் துவங்கி நவ., 7ல் சூரசம்ஹாரம், நவ., 8 திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
பழநி கோயிலில் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் சஷ்டி விரதம் விரதம் இருந்து வழிபாடு செய்வது பிரசித்தி பெற்றது. தற்போதைய குரோதி ஆண்டு, ஐப்பசி 16, (நவ.,2ல்) உச்சிக்கால பூஜைக்கு பின் மலைக் கோயிலில் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்க உள்ளது. அன்று முதல் சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பர புறப்பாடு விழா நாட்களில் நடைபெறும்.
சூரசம்ஹாரம்: ஆறாம் நாள், நவ.7., மாலை சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி,மாலை 3:10 மணிக்கு மேல் நடைபெறும். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி,தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, மலைக் கோயிலில் இருந்து சின்ன குமாரசுவாமி, அடிவாரம் எழுந்தருள்வார். சஷ்டி விரதம் விரதம் இருந்த பக்தர்கள் வாழைத்தண்டை படையல் ஆக்கி வழிபடுவர். அன்று கிரிவீதியில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும். அதில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிநிதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகிய நான்கு சூரர்களை வதம் செய்ய சின்ன குமாரசுவாமி எழுந்தருள்வார். அதன் பின் இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும்.
திருக்கல்யாணம்: ஏழாம் நாள், நவ.8ல் மலைக்கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி,,தெய்வானை சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்று மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, சுவாமி தங்க குதிரையில் திருஉலா நடைபெறும். பக்தர்கள் சஷ்டி விரதம் முடிப்பர். விழா நாட்களில் மலைக்கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.