பெங்களூரு; ஸ்ரீசாரதா பீடத்தின் 36வது பீடாதிபதியான ஸ்ரீஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சன்னிதானம், சன்னியாச தீட்சை பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில், இன்று பொன்விழா கொண்டாடப்படுகிறது. சிக்கமகளூரு சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசுவாமிகள், கடந்த 1974ல் சன்னியாச தீட்சை பெற்றார். அவர் சன்னியாச தீட்சை பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, பெங்களூரு பனசங்கரியில் உள்ள வேதாந்த பாரதி அமைப்பு சார்பில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இன்று காலை 10:30 மணிக்கு, ‘சுவர்ண பாரதி’ என்ற தலைப்பில், நமசிவாய ஸ்தோத்திரம் சமர்ப்பணம் நிகழ்ச்சி நடக்கிறது. மைசூரு கிருஷ்ணராஜநகர் யடதொரே ஸ்ரீ யோகானந்தேஸ்வரா சரஸ்வதி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர பாரதி மஹாசுவாமிகள், ஸ்ரீஸ்ரீபிரம்மானந்த பாரதி சுவாமிகள் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று சிறப்பு மலர் வெளியிடுகிறார். மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, துணை முதல்வர் சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்காக அரண்மனை மைதானமே களைகட்டி உள்ளது.